அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணியிடம் ரூ.14 ஆயிரம் திருட்டு
- கேமராக்கள் பழுதால் தப்பிய திருடன்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 31), எலக்ட்ரிசியன். இவரது மனைவி பூஜா (23).
திருட்டு
8 மாதம் கர்ப்பிணியான பூஜா வழக்கம்போல் நேற்று பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். பரிசோதனை செய்து முடிந்த பிறகு, மாத்திரை வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால், பூஜா தனது பையை தோளில் மாட்டிக்கொண்டு இருந்தார். மாத்திரை வாங்கி விட்டு பையை பார்த்தபோது, அது திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது பையில் வைத்திருந்த ரூ.14 ஆயிரத்ததை யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது.
பணத்தை இழந்த அங்கேயே கண்ணீர் விட்டு அழுதார். அவரது அழுகையை பார்த்த பொதுமக்கள் மத்தியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
பின்னர் பொதுமக்கள் பூஜாவை சமாதானம் செய்து அவரது தந்தை முத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமாராக்களை ஆய்வு செய்யும் படி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கூறினர்.
கேமராக்கள் பழுது
அப்போது ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்வதில்லை என அலட்சியமாக ஊழியர்கள் பதில் கூறினர்.
இதனையடுத்து முத்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்களின் தேவைக்காக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததால் பல்வேறு குற்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.