உள்ளூர் செய்திகள்

அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்தது

Published On 2023-09-03 08:54 GMT   |   Update On 2023-09-03 08:54 GMT
  • சூறை காற்றுடன் கனமழை பெய்தது
  • விவசாயிகள் வேதனை

ஆலங்காயம்:

திருப்பத்தூர் அடுத்த ஆலங்காயம் சுற்று வட்டார கிராம பகுதிகளான நிம்மியம்பட்டு, சுண்ணம்புபள்ளம், வெள்ளகுட்டை, துரிஞ்சிகுப்பம் ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.

இதனால் துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது.

விவசாயிகள் சாய்ந்து விழுந்த வாழை மரங்களில் இருந்து வாழை குலைகளை வெட்டி எடுத்து மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்தனர். கடன் பெற்று வாழை பயிரிட்டு தற்போது பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் சேதமானதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

Similar News