உள்ளூர் செய்திகள்

முருகன் கோவில்களில் ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு

Published On 2023-08-03 14:50 IST   |   Update On 2023-08-03 14:50:00 IST
  • காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன்
  • உயர் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பு

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள பசலிக்குட்டை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆடி பெருக்கை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டு சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்காவடி, பன்னீர் காவடி, பால் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 5 அடிமுதல் 20 அடி வரை உள்ள வெள்ளி வேல் அலகு குத்தியும், சிறிய மற்றும் பெரிய தேரை இழுத்து வந்தும், அந்தரத்தில் தொங்கிய படி பறக்கும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருப்பத்தூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி பகுதி களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூரில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு செல்லும் வழி முழுவதும் பலர் அன்னதானம் செய்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக சேவலை கோவில் மீது சூறை யிட்டு விட்டு சென்றனர்.

ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் அங்கு விழாக்கோலம் பூண்டது. திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News