தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் மனு
- ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கினர்
- 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக குற்றச்சாட்டு
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் 2 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் அகவிலைப்படி மருத்துவ படி உள்ளிட்டவை அடங்கிய 2022 ம் ஆண்டு முதல் மாத ஊதியம் ரூ.7 ஆயிரத்து 332 வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சம்பளத் தொகையானது ஒவ்வொரு ஊராட்சியிலும் வேறுபடு வதாக கூறப்படுகிறது.
இதனால் ஓட்சா கூட்டமைப்பு தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கே. லட்சுமணன் தலைமையில் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் தற்போது அரசு நிர்ணயித்துள்ள சம்பள விகிதப்படி அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் துரையிடம் (கி.ஊ) மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வின்போது மாநிலத் துணைத் தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் கண்ணன் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.