பைக்கில் நுழைந்த கொம்பேரி மூக்கன் பாம்பு
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே வேட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 48) இவர் நேற்று வீட்டில் இருந்து டீ குடிப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
நாட்டறம்பள்ளி அருகே தாயப்பன் கவுண்டர் தெருவில் உள்ள அரச மரத்தடியில் தனது வாகனத்தை நிறுத்தி விட்டு டீ கடைக்கு சென்றார் அப்போது அரச மரத்தின் மீது இருந்து பாம்பு ஒன்று திடீரென மோட்டார் சைக்கிள் மீது விழுந்து மோட்டார் சைக்கிளில் நுழைந்தது.
இதனை கண்ட அப் பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளில் பாம்பு நுழைந்தது கண்டு கூச்சலிட்டனர். அப்போது பாம்பு வெளியே வரவில்லை.
இதனால் அங்கிருந்து பொதுமக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மெக்கானிக் வரவழைத்து பைக்கை பிரித்து பார்த்த போது பாம்பு வெளியே வந்தது.
இதனையடுத்து தீயணைப்பு துறையினர் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் 3 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.