நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து சுகாதார துறை இணை இயக்குனர் மாரிமுத்து கேட்டறிந்தார்.
அரசு மருத்துவமனையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
- டாக்டர்களுக்கு இணை இயக்குனர் அறிவுரை
- நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் தினம்தோறும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்கின்றனரா என ஆய்வு செய்தார்.
மேலும் புறநோயாளிகளிடமும் கர்ப்பிணிகள் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களிடமும் மற்றும் தங்கி உள்ள அனைத்து வார்டுகளில் நேரிடையாக சென்று டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
அரசு மருத்துவமனை முழுவதும் தூய்மையாக வைத்து இருக்க இணை இயக்குனர் மாரிமுத்து டாக்டர்களிடம் கூறினார்.
ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர்கள் பாலகிருஷ்ணன், சுகாதார செவிலியர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.