உள்ளூர் செய்திகள்

ரெயிலில் சிக்கி கட்டிட தொழிலாளி கை துண்டானது

Published On 2023-08-27 14:23 IST   |   Update On 2023-08-27 14:25:00 IST
  • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 55). கட்டிடம் மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக நள்ளிரவு பாச்சல் பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் சிக்கி கொண்டார்.

இதில் அவரது இடது கை துண்டானது. வலியால் அலறி துடித்து கொண்டிருந்த இளங்கோவின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு துண்டான கையுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து துண்டான கையை ஐஸ் பாக்சில் வைத்து சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News