உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் பொது மக்கள் மறியல்

Published On 2023-01-01 09:25 GMT   |   Update On 2023-01-01 09:25 GMT
  • சாலை அமைக்க வலியுறுத்தல்
  • போக்குவரத்து பாதிப்பு

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ராயனேரி பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை மற்றும் தரை பாலம் உடைந்து குண்டும் குழியுமாக சேறும் சகதியூமாக காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி காலம் காலமாக கெட்டுக்காடு பகுதியில் வசித்து வந்த குடும்பங்களை சாகச சுற்றுலா தலம் அமைக்கும் என்கிற பெயரில் அப்புறப்படுத்த கூடாது.

தங்கள் பகுதி மக்களுக்கு பஸ் நிறுத்தம் வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைத்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அத்தனாவூரிலிருந்து நிலாவூர் செல்லும் சாலையில் ராயனேரி கூட்ரோடு பகுதியில் பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இருப்பினும் சமாதானம் ஆகாத அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன்பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் மற்றும் துணைத் தலைவர் திருமால் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News