சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
- சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- 11 தாம்பூலத்தில் பழங்கள், மங்கள பொருட்களுடன் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனை வழிப்பட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூரில் பழமைவாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 17 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் இரட்டை குளகரையிலிருந்து பால் காவடி, அலகு காவடி, பறவைக் காவடிகள் உடன் கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க கடைவீதி வழியாக கோயிலை வந்தடைந்தது. கோயில் முன்பு அமைக்கபட்டியிருந்த தீ குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
அப்போது பட்டாமணியார் குடும்ப வம்சத்தினர் 11 தாம்பால தட்டுகளில் பல்வேறு வகையான பழங்களுடன் மங்கள பொருட்களுடன் சீர்வரிசை எடுத்து வந்து அம்மனை சிறப்பித்து வழிப்பட்டனர். பின்னர் காத்த வீரன் முன் செல்ல சீத்தாளதேவி மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், இந்து அறநிலைத் துறை செயல் அலுவலர், விழா குழுவினர் மற்றும் கிராமத்தினர் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி வேல்முருகன், ராஜ் கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதா கணபதி, கட்சி பிரமுகர்கள் பக்தர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.