உள்ளூர் செய்திகள்

விவசாயியை நாயை விட்டு கடிக்க வைத்தவர்கள்: நீதிமன்ற உத்தரவால் அண்ணன், தம்பி மீது போலீசார் வழக்கு

Published On 2022-11-23 09:44 GMT   |   Update On 2022-11-23 09:44 GMT
  • நாயை ஏவி கிருஷ்ணமூர்த்தியை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
  • காரிமங்கலம் போலீசார் இருவர் மீதும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மேல் கொள்ளுபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 65) விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியான குப்பன், சண்முகம் ஆகியோருக்கு இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

கடந்த ஆண்டில் கிருஷ்ணமூர்த்திக்கும் குப்பன், சண்முகம் ஆகியோருக்கு இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த குப்பன், சண்முகம் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான நாயை ஏவி கிருஷ்ணமூர்த்தியை கடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி போலீசில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதனால் அவர் பாலக்கோடு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று கிருஷ்ணமூர்த்தியை நாயை வைத்து கடிக்க வைத்த அண்ணன் தம்பியான குப்பன், சண்முகம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து காரிமங்கலம் போலீசார் இருவர் மீதும் இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News