உள்ளூர் செய்திகள்

மின்வேலியில் சிக்கி வாலிபர் பலி

Published On 2023-09-21 10:04 GMT   |   Update On 2023-09-21 10:04 GMT
  • உடலை பைக்கில் கட்டி 10 கி.மீ தூரம் தூக்கி ெசன்றார்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த சாலைவேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42). விவசாயி. இவர் தனது நிலத்தில் வேர்க்கடலை பயிரிட்டுள்ளார்.

முயல் வேட்டை

வயலில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதால் சுற்றி மின் வேலி அமைத்திருந்தார். அதே பகுதியில் உள்ள இருளர் காலணியை சேர்ந்தவர் சக்திவேல் (18) என்பவர் தனது 17 வயது நண்பனுடன் முயல் மற்றும் எலிகளை வேட்டையாடுவதற்காக வயலுக்கு சென்றார்.

நள்ளிரவு மின் வேலி ஒயர் இருப்பதை அறியாமல் சக்திவேல் அதனை மிதித்தார். அதிலிருந்து மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த அவனுடன் சென்ற சிறுவன் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். வயல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஏழுமலை சென்றபோது மின்வெளியில் சிக்கி சக்திவேல் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதனை மறைப்பதற்காக சக்திவேலின் உடலை 10 கிலோ மீட்டர் தொலைவில் எடுத்துக்கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் ராமாபுரம் பகுதிக்கு பைக்கில் சென்றார். அங்கு அடர்ந்த காட்டுப் பகுதியில் வீசிவிட்டு திரும்பி விட்டார்.

இச்சம்பவம் குறித்து சிறுவன், சக்திவேல் பெற்றோரிடம் நேற்று காலை தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் கீழ் கொடுங்காலூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ஏழுமலையிடம் விசாரணை நடத்தியபோது சக்திவேலின் உடலை ராமாபுரம் காட்டில் கொண்டு போய் வீசியதை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News