உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2023-09-05 09:25 GMT   |   Update On 2023-09-05 09:25 GMT
  • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த பில்லாந்தியை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவர் சென்னையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுதா (வயது 35).இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 2 வருடமாக சுதாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மீண்டும் இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார்.

இதைக் கண்ட சுதாவின் தாயார் அவரை மீட்டு நாவல் பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மாற்றப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுதா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சுதாவின் தந்தை பெரணமல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News