- ஆட்டோ பறிமுதல்
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
செய்யாறு:
செய்யாறு அடுத்த ஏறையூரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 55). விவசாயி.
இவருக்கு வீட்டின் அருகே ஒரு ஏக்கரில் சொந்தமாக நிலம் உள்ளது. அதில் இவர் கொட்டகை அமைத்து 30 ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆடுகள் சத்தம் கேட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது 2 வாலிபர்கள் ஆட்டோவில் 3 ஆடுகளை ஏற்றி கொண்டிருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முனுசாமி சத்தம் போட்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் வாலிபர்கள் ஆட்டோவை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இது குறித்து செய்யாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆடுகளை திருடிச் சென்ற வாலிபர்களை தேடி வந்தனர்.
நேற்று செய்யாறு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அதிலிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் செய்யாறு டவுன் வெங்கட் ராயன்பேட்டையை சேர்ந்தவர்கள் தமிழரசன் (28), மொய்தீன் (31) என்பதும், முனுசாமியின் ஆடுகளை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.