கிணற்றில் 10-ம் வகுப்பு மாணவி பிணமாக மீட்பு
- கிணற்றின் அருகே செருப்பு இருந்தது
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த கீழ் மட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேலு. கூலி தொழிலாளி. இவரது மகள் நிக்கித்தா (வயது 15). இவர் திருவத்திபுரம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு நிக்கித்தா சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் வேலு தேடினார். அவர் கிடைக்காததால் பின்னர் நிலத்திற்கு சென்று பார்த்தார்.
அப்போது குடிநீர் கிணற்றின் அருகே நிக்கித்தாவின் செருப்பு இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த வேலு செய்யாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குடிநீர் கிணற்றில் இறங்கி தேடினர். சிறிது நேர தேடுதலுக்கு பின்னர் நிக்கித்தாவை பிணமாக மீட்டு அவரது உடலை மேலே கொண்டு வந்தனர்.
இது குறித்து வேலு அனக்காவூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து நிக்கித்தாவின் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து நிக்கித்தா இறந்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.