உயர்கல்வி துறை பற்றிய ராமதாசின் கருத்துக்கு திருமாவளவன் கண்டனம்
- ராமதாஸ் அறிக்கை உள்நோக்கம் கொண்ட சாதி அரசியலாகவுள்ளது.
- தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உயர்கல்வித்துறையின் அரசாணை எண்-161-ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால், அந்த இடங்கள் முதலில் இஸ்லாமியர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டுமென்றும்; அதன்பின்னரும் காலியிடங்கள் இருந்தால் அவை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டுமென்றும்; போதிய எண்ணிக்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இல்லாத சூழலில் மட்டும்தான் அந்த இடங்கள் பட்டியலினம், பழங்குடியினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
இதில் உண்மை இல்லை. அவரது அறிக்கை உள்நோக்கம் கொண்ட சாதி அரசியலாகவுள்ளது. பாமகவின் இந்த சாதியவாத சூது அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.