ரூ.3 லட்சம் தராமல் ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் புகார்
- நான் மாவு அரைத்து தொழில் செய்து வருகிறேன். இந்த நிலையில் சீட் சேமிப்பு திட்டத்தில் மாதந்தோறும் பணம் போட்டு சேமித்து வந்தேன்.
- 8 ஆண்டுகளாக பணம் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சாந்தி மற்றும் உறவினர்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டரை சந்தித்து விட்டு மனு அளித்தனர். அதன்பிறகு அவர் கூறும்போது:-
நான் மாவு அரைத்து தொழில் செய்து வருகிறேன். இந்த நிலையில் சீட் சேமிப்பு திட்டத்தில் மாதந்தோறும் பணம் போட்டு சேமித்து வந்தேன். சீட்டு முடிவடையும் தருவாயில் இருக்கும் போது சீட்டு சேமிப்பு திட்டத்தின் உரிமையாளர் அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றும் பிறகு தருவதாக கூறி என்னிடம் 3 லட்ச ரூபாயை கடந்த 2015-ம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.
இதுவரை 8 ஆண்டுகளாக பணம் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது குறித்து கேட்டபோது அவர் பணம் தராமல் மிரட்டுகிறார். என்ன செய்வது என்றே தெரிய வில்லை கணவனை பிரிந்து வாழும் எனக்கு குடும்பம் நடத்துவதற்கு கூட சரிவர பணம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்போது பக்கவாதம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
சிகிச்சைக்கு கூட தற்போது பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே என்னிடம் ஏமாற்றியவரிடம் இருந்து 3 லட்ச ரூபாயை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.