உள்ளூர் செய்திகள்

கோவையில் முன்னாள் காதலியை நடுரோட்டில் தாக்கிய வாலிபர்

Published On 2022-11-19 14:41 IST   |   Update On 2022-11-19 14:41:00 IST
  • இளம்பெண் காந்திபுரத்தில் உள்ள அழகுநிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
  • காதலனும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

கோவை,

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் காந்திபுரத்தில் உள்ள அழகுநிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இளம்பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு 80 அடி ரோடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். பின்னர் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இதனையடுத்து இளம்பெண் வேறு ஒரு வாலிபரை திருமணம் செய்தார். அவரது காதலனும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் வாலிபரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்றார். இதனால் அவர் தனியாக வசித்து வந்தார்.

இதனையடுத்து அவர் செல்போன் மூலமாக தனது முன்னாள் காதலிக்கு தன்னிடம் பேசி பழகுமாறு அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தார். ஆனால் இதனை இளம்பெண் கண்டுகொள்ளவில்லை.

சம்பவத்தன்று இளம்பெண் அழகு நிலையத்துக்கு வேலைக்கு சென்று விட்டு 80 அடி ரோடு வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற அவரது முன்னாள் காதலன் தன்னிடம் பேசி பழகுமாறு கூறினார். அதற்கு இளம்பெண் பதில் அளிக்காமல் நடந்து சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவரது முன்னாள் காதலன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து இளம்பெண் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னுடன் பழக மறுத்த முன்னாள் காதலியை நடுரோட்டில் வைத்து தாக்கிய வாலிபரை தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News