உள்ளூர் செய்திகள்

தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை படத்தில் காணலாம்

அம்பையில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

Published On 2023-01-31 08:45 GMT   |   Update On 2023-01-31 08:45 GMT
  • அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்லும் வழியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
  • மக்கள் அனைவரும் திரண்டு சென்று அம்பை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கல்லிடைக்குறிச்சி:

அம்பை ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அருகில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் கடை

இதில் அம்பை, வி.கே.புரம் பகுதி பயனாளிகள் குடியிருந்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்லும் வழியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள், பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

மேலும் சுமார் 400-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. சுகாதார தேவைகள் எதுவும் சரிவர செய்து தரப்படவில்லை எனக்கூறி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் புகார் கூறி வந்தனர்.

இந்நிலையில் மக்கள் அனைவரும் திரண்டு சென்று அம்பை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் தாசில்தார் விஜயா பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்வதாக சமாதானம் செய்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜகோபால், பொரு ளாளர் வணங்காமுடி, சமூக ஆர்வலர் ரஹ்மான் சேட், துணைத்தலைவர் நெல்லையப்பன், செயலாளர் மனோ சித்ரா, இணை செயலாளர் மாரி செல்வி, சண்முகசுந்தரம், ஏசையா, ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தாசில்தாரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

Tags:    

Similar News