உள்ளூர் செய்திகள்

கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரெயில் திட்ட பணிகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது-கலெக்டர் கிராந்திகுமார் பேட்டி

Published On 2023-10-06 14:05 IST   |   Update On 2023-10-06 14:05:00 IST
  • பல்வேறு திட்டங்கள் மூலமாக ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட உள்ளது.
  • கோவை மாவட்டத்தை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் இருப்பதாக கலெக்டர் கிராந்திகுமார் பேட்டி

கோவை,

சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டருடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டம் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு திட்டங்களை செயல்ப–டுத்துவது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் உள்ளது.

குறிப்பாக போக்சோ வழக்குகள் பதிவாகி வருகிறது. இதனை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது மற்றும் மாதம் ஒருமுறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.

மனித-வனவிலங்கு மோதல் தடுக்க தனிகுழு அமைக்கப்பட உள்ளது. காட்டுப்பன்றி பிரச்சினை சட்ட ரீதியாக அணுக வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திட்டங்கள் செயல்படுத்துவதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு துறைகள் 5 முதல் 10-வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் சிறப்பாக உள்ளது. சுகாதாரத்துறையில் "ஸ்டெப் சர்வே" இலக்கு வைத்து உள்ளது. அந்த இலக்கு நோக்கி சென்று வருகிறோம். பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் தவிர்ப்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்த வருடம் 3 முதல் 4 இறப்பு பதிவாகி உள்ளது.

மருத்துவ காப்பீடு திட்டத்தில் காப்பீடு அட்டையை 7 லட்சம் பேர் வைத்துள்ளனர். இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் பயன்படுத்தி கொள்ள முடியும். நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் மற்ற மாவட்டங்களை விட சிறப்பாக கோவை மாவட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 100 சதவீதம் எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மூலமாக ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட உள்ளது.

இதனை அனைத்து வகை யான பயனாளிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் ஆலோசனை கூட்டம் பயனுள்ளதாக இருந்தது.

கோவைக்கான மாஸ்டர் பிளானை அரசுக்கு சமர்ப்பித்து உள்ளோம். இதற்கு மிகப்பெரிய தீர்வு கிடைக்கும் என நினைக்கிறேன். மண்டல அளவிலான மாஸ்டர் பிளான் தயாரித்து வருகிறோம்.

மாவட்டத்தில் அரசு நிலம் மீட்பு அதிகளவில் நடந்து வருகிறது. விமான நிலையம் விரிவாக்கத்தில் தற்போது வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் விமான நிலையம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மீதம் உள்ள 20 முதல் 30 ஏக்கர் வரையிலான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் ஒரு மாதத்தில் முடியும். மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பாதுகாக்க வேலி அமைக்கப்படும்.

கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகள் படிப்படியாக நடத்தப்படும். மேற்கு புறவழிச்சாலை பணிகளுக்கு 2ம் கட்ட நிலம் கையகப்படுத்தும் பணிகள் டிசம்பரில் முடியும். மெட்ரோ ரெயில் அவிநாசி ரோடு, சரவணம்பட்டி இடது புறத்தில் அமைய உள்ளது. இந்த பணிகளால் பாதிப்பு ஏற்படாது. யாரும் கவலைப்பட தேவையில்லை.

டெக்னாலஜி நிறைய இருக்கிறது. பிளான் செய்து பணிகள் நடத்தப்படும்.

மேலும், தொழில் துறையினருக்கு குறைதீர் கூட்டம் நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மற்றும் சங்கங்கள் மூலம் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திட்ட சாலைக்கு என ரூ.144கோடி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதில், ரூ. 20 கோடிக்கு திட்ட சாலைக்கு அறிக்கை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கல்வி கடனுக்கு 2,500 விண்ணப்பம் வாங்கி உள்ளோம். இதில், வங்கிகளில் உள்ள பிரச்சினை குறித்து தலைமை நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம்.

இதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் குழு அமைத்து 2 வாரங்களில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

கோவைக்கு கல்வி கடன் வழங்க ரூ.400 கோடி இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் யாருக்கு தேவை என்பதை கண்டறிந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகைக்கு 31 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்து உள்ளனர். மாவட்ட அளவில் 60 சதவீதம் பேர் பயன் அடைந்து உள்ளனர்.

பள்ளி, கல்லூரியில் போதை பொருள் பழக்கம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News