வருசநாடு பகுதியில் கன மழை காரணமாக இன்று வானம் பனிமூட்டத்துடன் காணப்பட்டது.
வருசநாடு: திடீர் கோடைமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
- மழையின் காரணமாக கொட்டைமுந்திரி, மா, எலுமிச்சை, உள்ளிட்டவற்றில் பூ, பிஞ்சுகள் உற்பத்தி அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
- இன்று காலை வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை, கொட்டை முந்திரி உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாயத்திற்கு மூலவைகை ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை இல்லாத காரணத்தால் வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் விவசாய நீர் தேவை தற்போது இரண்டு மடங்காகியுள்ளது. எனவே பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. குறிப்பாக வைகை ஆறு நீர் பிடிப்பு பகுதியான வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை பெய்தது.
இதனால் இன்று காலை முருக்கோடை கிராமம் வரை வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல மழையின் காரணமாக கொட்டைமுந்திரி, மா, எலுமிச்சை, உள்ளிட்டவற்றில் பூ, பிஞ்சுகள் உற்பத்தி அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே நேற்று பெய்த மழையின் காரணமாக இன்று காலை வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் காணப்பட்டது. பனிமூட்டம் சாலைகளை மறைத்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றனர். காலை 8 மணி வரை பனிமூட்டம் நீடித்ததால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்தது.