அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்
- கருமத்தம்பட்டியில் பொதுமக்கள் கோரிக்கை
- விபத்து அவசர சிகிச்சை அளிக்க டாக்டர்களை நியமிக்க வேண்டும்
கருமத்தம்பட்டி,
கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ஆடுவதைக் கூடத்தில் தற்காலிகமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு தினந்தோறும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் வாரம் தோறும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்ய செவ்வாய்க்கிழமை தோறும் வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, கழிவறையில் தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு என தனி கட்டிடம் கட்ட வேண்டும் எனவும் மற்றும் கருமத்தம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விபத்து ஏற்பட்டால் அவசர கால சிகிச்சைக்கு அவினாசி மற்றும் கோவை செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் 24 மணி நேர விபத்து அவசர சிகிச்சை அளிக்க டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.