உள்ளூர் செய்திகள்

முற்றுகையிட்டு போராட்டம் செய்தவர்களிடம் டி.எஸ்.பி பூரணி, மாவட்ட கவுன்சிலர் தாமரைச் செல்வன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தனியார் சர்க்கரை ஆலையில் பூஜை போட வந்த நிர்வாகத்தினரை விவசாயிகள் முற்றுகை

Published On 2022-06-11 15:34 IST   |   Update On 2022-06-11 15:34:00 IST
  • ஏற்கனவே இயங்கி வந்த ஆலை நிர்வாகம் இந்த ஆலையை சென்னையிலுள்ள ஹால்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டதாக தகவல் கிடைத்தது.
  • கோர்ட் உத்தரவுபடி விவசாயிகளுக்கு வெட்டிய கரும்பிற்கு உண்டான செட்டில்மென்ட் தொகையை அனைத்தும் ஹால்ஸ் நிறுவனம் வழங்கும்.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகேயுள்ள திருமண்டங்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கடந்த ஐந்து ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது. இந்த ஆலைக்கு கரும்பு வெட்டிய விவசாயிகளுக்கும், ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கும், விவசாயிகள் மீது வங்கிகளில் கடன் பெற்றுள்ளது உள்ளிட்ட பல பிரச்சனைகளால் ஆளை இயங்கவிடாமல் மூடப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே இயங்கி வந்த ஆலை நிர்வாகம் இந்த ஆலையை சென்னையிலுள்ள ஹால்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்து விட்டதாக தகவல் கிடைத்தது. அதன்படி சென்னை ஹால்ஸ் நிறுவனம் அதன் தலைமை அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முனுசாமி என்பவரை நியமனம் செய்து அவர் தலைமையில் நேற்று ஆளை உள்ளே பூஜை செய்வதற்கு அந்த நிர்வாகத்தினர் வந்து பூஜை செய்துள்ளனர்.இதனை அறிந்த விவசாயிகள் ஒன்றுகூடி ஆலையை முற்றுகையிட்டனர்.

எங்களுக்கு கரும்பு வெட்டி வழங்கவேண்டிய ரூ.100 கோடி, மற்றும் எங்கள் பெயரில் வங்கிகளில் போலியாக பெற்ற ரூ.350 கோடி, ஆகியவற்றை வழங்கிவிட்டு பூஜை போடுங்கள் என கூறி புதிதாக வாங்கியுள்ள ஹால்ஸ் இந்நிறுவனத்தினரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

தகவலறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) அழகம்மாள், மண்டல துணை வட்டாட்சியர் பிரியா, வருவாய் ஆய்வாளர் சுகுணா, மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி கண்ணதாசன், ஆகியோர் விவசாயிகளிடமும் ஹால்ஸ் நிறுவனத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் படி வருகின்ற புதன்கிழமை காலை 11 மணி அளவில் ஆலை வளாகத்தில் அனைத்து விவசாயிகளையும் அழைத்து ஹால்ஸ் நிறுவனத்தினர் மற்றும் காவல்துறையினர் வருவாய் துணையுடன் இணைந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்பட்டவுடன் ஆலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்தனர்.இதற்கு விவசாயிகள் ஒத்துக்கொண்டு முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஹால்ஸ் நிறுவன தலைமை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முனுசாமி கூறும்போது:-

கோர்ட் உத்தரவுபடி விவசாயிகளுக்கு வெட்டிய கரும்பிற்கு உண்டான செட்டில்மென்ட் தொகையை அனைத்தும் ஹால்ஸ் நிறுவனம் வழங்கும். முழுமையாக தொகைகளை வழங்க இயலாவிட்டாலும் தவணை முறையில் அனைத்து விவசாயிகளுக்கும் அவர்கள் வெட்டிய கரும்பிற்கு உண்டான தொகையை எங்கள் நிறுவனம் வழங்கும் என்றார்.

Tags:    

Similar News