கடைகளில் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது
- மர்ம நபர் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றார்.
- தனது உறவினரின் வீட்டில் தங்கி இருந்து திருட்டு தொழிலில் ஈடுப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள காய்கறி கடை, பழக்கடை, உணவகம், கறி கடைகள் உள்ளிட்ட 6 கடைகளில் நள்ளிரவில் பூட்டை உடைத்து மர்ம நபர் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றார்.
இது குறித்து வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திட்டச்சேரி கடைதெருவில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கும்பகோணம் செட்டிமண்டபம் மேலப்புளி யம்பேட்டை டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 38) என்பதும், இவர் துண்டம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கி கொண்டு திட்டசேரி கடைகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தார்.
மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.