எட்டயபுரத்தில் தேவர் படத்தை அவமதித்த 3 பேர் கைது
- மர்ம நபர்கள் 3 பேர் குடிபோதையில் தேவர் படத்தை அவமதிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
- 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேலவாசலில் தூத்துக்குடி-கோவில்பட்டி செல்லும் சாலையில் தேவர் படம் உள்ளது. இப்பகுதியில் நேற்று மாலை மர்ம நபர்கள் 3 பேர் குடிபோதையில் தேவர் படத்தை அவமதிப்பு செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இப்பகுதி மக்கள் தூத்துக்குடி-கோவில்பட்டி சாலையில் மறியலில் ஈடுபடத் தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டனர். அதில் அவமதிப்பு செயலில் ஈடுபட்டது எப்போதும் வென்றான் முத்துநகர் பகுதியை சேர்ந்த கனகராஜ் (வயது25), அதே ஊரை சேர்ந்த சத்தியமூர்த்தி (26), விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்த அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.