வேப்பம்பட்டு அருகே கடன் தொல்லையால் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
- அய்யப்பன் தொழில் சம்பந்தமாக சிலரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார்.
- பணம் கொடுத்தவர்கள் அய்யப்பனுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த சிறுகளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது26). இவர் சொந்தமாக மருந்துகடை நடத்தி வந்தார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
அய்யப்பன் தொழில் சம்பந்தமாக சிலரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அதனை அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் அய்யப்பனுக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்தார்.
இந்தநிலையில் நேற்று அய்யப்பன், அய்யத்தூரில் உள்ள தனியார் கல்லுாரி பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த அய்யப்பன் யார்? யாரிடம்? இருந்து பணம் வாங்கினார்? அவருக்கு யாரேனும் மிரட்டல் விடுத்தனரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.