உள்ளூர் செய்திகள்

வாணியம்பாடி அருகே காதல் தகராறில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை

Published On 2023-11-16 04:24 GMT   |   Update On 2023-11-16 04:24 GMT
  • சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் முரளி (வயது 22), கூலி தொழிலாளி.

இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், முரளியை எச்சரிக்கை செய்தனர்.

இருப்பினும் முரளி அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேச வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் அண்ணன் சந்தோஷ், முரளியை பலமுறை கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முரளி இன்று காலை தும்பேரிக்கு வந்தார்.

இதனைப் பார்த்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த முரளி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கி இருந்த சந்தோஷை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News