தொழிற்சாலையில் மேற்கூரை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட வாலிபர் தவறி விழுந்து பலி
- 40 அடி உயரத்தில் பணியில் இருந்தபோது சக்திவேல் நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்துள்ளார்.
- சக்திவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மாதவரம்:
மாதவரம் தட்டான்குளம் சாலையில் தனியாருக்கு சொந்தமான அலுமினிய உருக்கு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள ஒரு குடோனில் மேற்கூரை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. சென்னை எண்ணூர் தாழங்குப்பத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் சக்திவேல் (வயது 25) உட்பட 4 பேர் கொண்ட ஒப்பந்த ஊழியர்கள் இந்த பணியை மேற்கொண்டனர்.
நேற்று மதியம் 40 அடி உயரத்தில் பணியில் இருந்தபோது சக்திவேல் நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்துள்ளார். தலை, கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சக்திவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் உதவி கமிஷனர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.