உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்தவர் கைது

Published On 2022-10-01 12:00 IST   |   Update On 2022-10-01 12:00:00 IST
  • பெண் குளிக்கும்போது ஜன்னல் வழியாக சதீஷ்குமார் செல்போனில் ஆபாச படம் எடுத்துள்ளார்.
  • அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் அலமேலு அம்மன் குறுக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அந்த பகுதியில் ஒரு பெண் குளிக்கும்போது ஜன்னல் வழியாக சதீஷ்குமார் செல்போனில் ஆபாச படம் எடுத்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார்.

உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்த போது சதீஷ்குமார் செல்போனில் வீடியோ எடுத்தது தெரியவந்தது.

அவரிடமிருந்து செல்போனை பிடுங்கி அவரைப் பிடித்து வைத்து திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை புகார் கொடுத்தார்.

திருவள்ளூர் டி.எஸ்.பி சந்திரதாசன் தலைமையில், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அவரது செல்போனில் பெண்கள் குளியல் வீடியோ இருப்பதை உறுதி செய்த போலீசார் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் செல்போனில் வீடியோ எடுத்த சதீஷ்குமாரின் பஞ்சர் கடைக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் வந்து சதீசின் தந்தை தேவேந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதுடன் கடையில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றனர்.

இது தொடர்பாக 3 பேர் மீது மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News