தர்மபுரியில் இருந்து திருப்பூருக்கு புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
- போலீசாரை கண்டதும் காரில் வந்த நபர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார்.
- காரை சோதனை செய்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஜெகதீஷ் மற்றும் போலீஸ்காரர்கள் பிரபு, சதீஷ், குமரவேல் ,வேல்முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பூர் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் காரில் வந்த நபர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார். அந்த வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். தொடர்ந்து காரை சோதனை செய்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தர்மபுரி மாவட்டம் கரிமங்கலத்தைச் சேர்ந்த மாதேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது. மேலும் இவர் தர்மபுரியில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து திருப்பூரில் உள்ள ஒரு நபருக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.