உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி

Published On 2022-08-22 09:26 GMT   |   Update On 2022-08-22 09:26 GMT
  • முத்து செல்வி அம்பை பகுதியில் ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
  • முத்து செல்வி மட்டும் தனது குழந்தையுடன் அணைந்தநாடார்பட்டியில் வசித்து வருகிறார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே இடைகாலை அடுத்த அணைந்தநாடார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 31).

இவருக்கு முத்து செல்வி(27) என்ற மனைவியும், பென்ஷிகா(7) என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் சென்னையில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

முத்து செல்வி அம்பை பகுதியில் ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் மட்டும் தனது குழந்தையுடன் அணைந்தநாடார்பட்டியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த முத்து செல்வி தனது கணவருடன் செல்போனில் பேசி உள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த முத்துசெல்வி வீட்டில் இருந்த எலிமருந்தை எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மேலும் தனது 7 வயது குழந்தைக்கும் அதனை கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். வீட்டில் அவர்கள் மயங்கி கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News