உள்ளூர் செய்திகள்

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்து ரூ.40 லட்சம் மோசடி: வாலிபர் மீது பெண் பரபரப்பு புகார்

Published On 2022-11-13 09:11 GMT   |   Update On 2022-11-13 09:11 GMT
  • அப்துல் ரகுமான் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தை என்பதும், என்னை ஏமாற்றி பண மோசடி செய்ததும் தெரியவந்தது.
  • புகாரின் பேரில், போலீசார் முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி செய்த அப்துல்ரகுமான் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 31 வயது இளம்பெண்.

இவர் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் பட்டப்படிப்பை முடித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தேன். அதற்காக கடந்த 2019-ம் ஆண்டு கோவை வந்து காந்திபுரத்தில் தங்கி அங்குள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் படித்து வந்தேன்.

அப்போது காந்திபுரம் 2-வது வீதியில் செல்போன் கடையில் வேலை பார்த்த அப்துல்ரகுமான் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் கடந்த ஜூலை 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

குடும்பம் நடத்தும் போது பல முறை எங்களுக்குள் தாம்பத்திய உறவு நடந்தது. இந்த நிலையில் சொந்த தொழில் செய்வதற்கு பணம் தேவைப்படுவதாக கூறி என்னிடம் ரூ. 40 லட்சம் பணம், 4.5 பவுன் தங்கம் மற்றும் வைர மோதிரத்தை அப்துல் ரகுமான் வாங்கினார்.

ஆனால் அவர் தொழில் தொடங்காமல் புதிய வீடு கட்டியதாக தெரிகிறது. இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தற்போது நான் 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன். ஏற்கனவே நான் 2 முறை கருக்கலைப்பும் செய்துள்ளேன்.

இந்நிலையில், அப்துல் ரகுமான் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தை என்பதும், என்னை ஏமாற்றி பண மோசடி செய்ததும் தெரியவந்தது. இது குறித்து கேட்டபோது எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

என்னை ஏமாற்றிய அப்துல்ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

புகாரின் பேரில், போலீசார் முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி செய்த அப்துல்ரகுமான் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News