உள்ளூர் செய்திகள்

கந்திலி அருகே திண்ணையில் தூங்கிய பெண் கொலை- மருமகளிடம் விசாரணை

Published On 2022-07-01 05:27 GMT   |   Update On 2022-07-01 05:27 GMT
  • திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே செவ்வாத்தூர் புதூரை சேர்ந்தவர் செல்வராஜ்.
  • வீடு திறக்காததால் வீட்டுக்குள் இருந்த அம்சா அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்தார்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே செவ்வாத்தூர் புதூரை சேர்ந்தவர் செல்வராஜ். திருப்பத்தூரில் உள்ள கடையில் இரவு நேர பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராமரோஜா (வயது 58).

இவர்களுக்கு புனிதா என்ற மகளும், ஏழுமலை என்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. ஏழுமலை சென்னையில் கார் டிரைவராக உள்ளார்.

இதனால், செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ராமரோஜா மருமகள் அம்சா (வயது21) மற்றும் 10 மாத பேத்தியுடன் வீட்டில் வசித்து வந்தனர்.நேற்று முன்தினம் இரவு பணிக்காக செல்வராஜ் திருப்பத்தூர் சென்றார்.

இரவு சுமார் 10 மணியளவில், வீட்டுக்குள் மருமகளும் பேத்தியும் தூங்கினர். ராமரோஜா வெளி தாளிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணையில் தூங்கினார். அந்த நேரத்தில் அவரை மர்ம நபர்கள் கழுத்தை நெறித்து கொலை செய்தனர்.

நேற்று காலை வெகு நேரமாகியும், வீடு திறக்காததால் வீட்டுக்குள் இருந்த அம்சா அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்தார்.

அவர்கள் அங்கு வந்து பார்த்தபோது, ராமரோஜா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக ராமரோஜாவின் மருமகள் மற்றும் பெரிய குனிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News