உள்ளூர் செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த கும்பல் யார்? போலீசார் விசாரணை

Published On 2024-04-21 10:15 GMT   |   Update On 2024-04-21 10:15 GMT
  • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா பாலையம்பட்டி ஈ.பி. காலனியை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 45).

இவர் நெல்லை சந்திப்பு பாபுஜி நகர் காட்டுப்பகுதியில் நேற்று மாலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதா, சந்திப்பு உதவி கமிஷனர் வெங்கடேசன் உள்ளிட்டவர்களும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிராஜை கொலை செய்த கும்பல் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த இடத்தில் காளிராஜிக்கு சொந்தமான கார் நின்றது. அந்த காரை திறந்து பார்த்தபோது சில நில பத்திரங்கள், ஆதார் அட்டையின் நகல்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை இருந்தது. அதன் மூலம் நடத்திய விசாரணையில் அவரது மனைவி வளர்மதியின் தொடர்பு எண் கிடைத்தது.

அதன் மூலமாக அவரிடம் செல்போனில் நடத்திய விசாரணையில், காளிராஜ் மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலங்களை வாங்கி விற்பனை செய்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் என்பதும், சம்பவத்தன்று நிலம் வாங்கி விற்பனை செய்வதற்காக நெல்லையில் ஒருவர் அழைத்ததாகவும் அதன் பேரில் அங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து காளிராஜை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? நிலம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களிலும் கொலை கும்பல் உருவங்கள் தெளிவாக தெரியவில்லை.

இதனால் உதவி போலீஸ் கமிஷனர்கள் செந்தில் குமார், வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு காளிராஜை கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட காளிராஜ் மீது நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News