உள்ளூர் செய்திகள்

கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்- மத்திய அரசிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

Published On 2023-03-30 11:02 GMT   |   Update On 2023-03-30 11:02 GMT
  • கோடைகால விடுமுறை காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னை மற்றும் வேளாங்கண்ணிக்கு ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர்.
  • ரெயில்களில் கூட்டம் மிக அதிகமாக காணப்படுவதுடன் மக்கள் பயணச் சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

சென்னை:

புதுடெல்லியில் மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நாடார் சங்க நிர்வாகிகளுடன் சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் கோடை கால சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கன்னியாகுமரி மக்களின் நீண்ட நாள் ரெயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது. குறிப்பாக திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர ரெயில் மற்றும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கூடுதலாக தினசரி ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளது.

கோடைகால விடுமுறை காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னை மற்றும் வேளாங்கண்ணிக்கு ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். அப்போது ரெயில்களில் கூட்டம் மிக அதிகமாக காணப்படுவதுடன் மக்கள் பயணச் சீட்டு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு கோடைகால விடுமுறையின் போது திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரெயில்களை தினமும் இயக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 15 மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் கிழக்கு கடற்கரை ரெயில்வே திட்டத்தினை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும்.

மேலும் நிலுவையில் உள்ள நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News