உள்ளூர் செய்திகள்

சாத்தூர் அருகே விபத்து: திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேர் பலி

Published On 2022-12-28 14:52 IST   |   Update On 2022-12-28 14:52:00 IST
  • விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அம்மன்கோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 49). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் வருடந்தோறும் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கருப்பசாமி திருச்செந்தூர் செல்ல மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். நேற்று இரவு இவரது தலைமையில் அந்தப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இன்று அதிகாலை பாதயாத்திரைக்கு சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தது.

புல்வாய்பட்டி விலக்கு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் நடந்து சென்று கொண்டிருந்த கருப்பசாமி மற்றும் சிவகாசி மீனாட்சி காலனியை சேர்ந்த சங்கரன் (45) ஆகியோர் மீது மோதிவிட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கருப்பசாமி, சங்கரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர். பாதயாத்திரை சென்ற 2 பேர் விபத்தில் பலியானது சிவகாசி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News