உள்ளூர் செய்திகள்

அந்தியூர் அருகே லஞ்சம் வாங்கி கைதான கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு

Published On 2022-09-14 04:36 GMT   |   Update On 2022-09-14 04:36 GMT
  • லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்வராஜிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் கொடுக்க சொன்னார்கள்.
  • சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் செல்வராஜ் எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று சதீஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் கொடுத்தார்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சதீஷ்குமார் (35). அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் பட்டா மாறுதல் பெறுவதற்காக சதீஷ்குமாரை அணுகி உள்ளார்.

அப்போது சதீஷ்குமார் பட்டா மாறுதல் செய்து தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத செல்வராஜ் இது பற்றி கருங்கல்பாளையம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செல்வராஜிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமாரிடம் கொடுக்க சொன்னார்கள்.

அதன்படி சம்பவத்தன்று மாலை 4 மணியளவில் செல்வராஜ் எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று சதீஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அலுவலகத்தில் நுழைந்து சதீஷ்குமாரை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தார்கள். மேலும் லஞ்சம் பெற இடைத்தரகராக செயல்பட்ட பாலசுப்பிரமணியம் என்பவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள சிவசக்தி நகரில் இருக்கும் சதீஷ்குமாரின் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள்.

இந்நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சதீஷ்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் வகையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News