உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பை தடுத்த ஊராட்சி தலைவியின் கணவர் மீது தாக்குதல்- பெண்கள் மறியல்

Published On 2023-06-06 08:51 GMT   |   Update On 2023-06-06 08:52 GMT
  • வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் அதில் உழுது நாற்று நட முயற்சித்தனர்.
  • ஊராட்சி தலைவியின் கணவர் காளிதாஸ் தடுத்தார். மேலும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்தார்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி ஊராட்சிமன்ற தலைவர் சாந்தி. இவரது கணவர் காளிதாஸ் (45). சூளைமேனி கிராம எல்லையில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.

வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் அதில் உழுது நாற்று நட முயற்சித்தனர்.

இதனை ஊராட்சி தலைவியின் கணவர் காளிதாஸ் தடுத்தார். மேலும் ஆக்கிரமிப்பாளர்களை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த தகராறில் காளிதாஸ் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் காளிதாஸ் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அவரது மனைவியும் ஊராட்சி தலைவியுமான சாந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சூளைமேனியில் ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News