ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வந்த 60 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது
- காரில் ரகசிய அறை அமைத்து 60 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
- 60 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம்:
ஆந்திரா மாநிலத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஞ்சிபுரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், கீழம்பி பகுதியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் ரகசிய அறை அமைத்து 60 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காரில் இருந்த தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் பாண்டீஸ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 60 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.