உள்ளூர் செய்திகள்

திருச்சி அருகே சீட்டு கம்பெனி உரிமையாளர் ஓட்டம்- கலெக்சன் ஏஜென்ட் தற்கொலை

Published On 2023-08-23 11:07 IST   |   Update On 2023-08-23 11:07:00 IST
  • ரஜினியிடம் சீட்டு பணம் செலுத்தியவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி அருகே உள்ள சீராதோப்பு ஏகிரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ரஜினி (வயது 43). இவர் திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் இயங்கி வந்த ஒரு சீட்டு கம்பெனியில் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார்.

இதை தொடர்ந்து தனது உரிமையாளர் மீதான நம்பிக்கையில் வீட்டின் அருகாமையில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சீட்டு பிடித்து பணம் வசூலித்து கொடுத்து வந்தார். அந்த வகையில் ரூ. 5 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்கு உரிமையாளர் கொடுக்க வேண்டி இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரஜினியின் உரிமையாளர் ஆறுமுகம் சீட்டு பணத்துடன் மாயமானார். இதைத்தொடர்ந்து ரஜினியிடம் சீட்டு பணம் செலுத்தியவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர்.

இதனால் செய்வதறியாமல் திகைத்த ரஜினி கூடலூரில் உள்ள சுடுகாடு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் ரஜினி சிகிச்சை பலகைக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தாயார் தமிழரசி ஜீயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்த ரஜினிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ஆடி மாதம் பிறந்ததால் மனைவியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தாமதமாக திருமணம் செய்த நிலையில் சீட்டு கம்பெனி உரிமையாளரின் நம்பிக்கை துரோகத்தால் ரஜினி மன வேதனையில் தற்கொலை செய்யும் நிலை ஏற்பட்டது.

கணவர் இறந்ததால் புதுபெண் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். சீட்டு கம்பெனி உரிமையாளர் ஓட்டம் பிடித்ததால் கலெக்சன் ஏஜென்ட் திருமணம் ஆன 4 மாதத்தில் தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News