உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் அருகே முன் விரோதத்தில் வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2022-11-11 11:14 IST   |   Update On 2022-11-11 11:14:00 IST
  • திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் பாரதிராஜா.
  • திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனபாண்டி உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் பாரதிராஜா (வயது35) இவருக்கு திருமணமாகி முகிலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிராஜாவிற்கும், அதே ஊரை சேர்ந்த சந்தனபாண்டி என்பவருக்கும் கோவில் திருவிழாவில் மைக் செட் போடுவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் அடிக்கடி இவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து பாரதிராஜா தலைமறைவானார். இந்த நிலையில் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக தனது வக்கீல் மூலம் ஜாமீன் பெற்ற பாரதிராஜா நேற்று புதுப்பட்டிக்கு வந்தார். பின்னர் இரவு 9.30 மணியளவில் அங்குள்ள டீக்கடையில் அவரது நண்பர் சரவணக்குமார் என்பவருடன் பாரதிராஜா பேசிக் கொண்டிருந்தார்.

தலைமறைவாக இருந்த பாரதிராஜா ஊருக்கு வந்திருப்பதை அறிந்த சந்தனபாண்டி தரப்பினர் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது. அதன்படி டீக்கடையில் நின்றிருந்த பாரதி ராஜாவை சந்தனபாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதில் பல்வேறு இடங்களில் வெட்டு காயம்பட்ட பாரதிராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். முன்னதாக அங்கு நின்றிருந்த சரவணக்குமாரையும் அந்த கும்பல் வெட்டியது. படுகாயமடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தனபாண்டி உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர்.

Similar News