உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் நிதி நிறுவன ஊழியரை தாக்கி பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது

Published On 2024-04-01 09:08 GMT   |   Update On 2024-04-01 09:08 GMT
  • மணிபாரதி அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ரஹீம், சதீஸ் உட்பட 4 பேரையும் கைது செய்தனர்.

தஞ்சாவூா்:

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்தவர் மணிபாரதி (வயது 26). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவதன்று வேலையை முடித்து கொண்டு ரெயிலில் ஆடுதுறைக்கு செல்வதற்காக தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

ரெயில்வே குட்ஷெட் பகுதியில் வந்த போது 4 பேர் திடீரென மணிபாரதியை சுற்றி வளைத்து தாக்கி அவரிடமிருந்து ரூ.480 பறித்தனர். பின்னர் செல்போனை பறிக்க முயலும் போது மணிபாரதி அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை பின் தொடர்ந்து 4 பேரும் ஓடினர்.

இதையடுத்து மணிபாரதி அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் தலைமை காவலர் தேவஞானம், காவலர்கள் கண்ணன், சிவபாதசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று வழிப்பறிக் கொள்ளையர்கள் 4 பேரையும் விரட்டி சென்று சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த அப்துல்ரஹீம் (வயது 19), ஒக்கநாடு கீழையூர் வருண் ( 20), தஞ்சை வண்டிக்கார தெரு சதீஷ் ( 19), ஜெபமாலைபுரம் முகமது ரோஷன் (20) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்ரஹீம், சதீஸ் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News