உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

Published On 2022-09-07 10:23 GMT   |   Update On 2022-09-07 10:23 GMT
  • கடந்த 2017-ம் ஆண்டு முதல் சிறுமிக்கு 13 வயதில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ் பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
  • கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அம்பத்தூர்:

ஆலந்தூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் பாண்டிய ராஜ்(50). இவர் சென்னை மாநகர காவல்துறையில் வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணவனை பிரிந்து மகளுடன் வசித்து வரும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ் அடிக்கடி இளம்பெண்ணை சந்தித்து வந்தார்.

அப்போது வீட்டில் இருந்த காதலியின் மகள் மீதும் அவருக்கு ஆசை ஏற்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் சிறுமிக்கு 13 வயதில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ் பாலியல் ரீதியிலான அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இதனை வெளியில் சொல்ல முடியாமல் இளம்பெண்ணும், அவரது மகளும் தவித்து வந்தனர். தற்போது அந்த சிறுமி, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஆனாலும் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜின் ஆசை மேலும் அதிகரித்தது. அவர், கல்லூரி மாணவிக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார்.

இதனைப் பொறுக்க முடியாத மாணவின் தாய், சப்-இன்ஸ்பெக்டர் மீது வில்லிவாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜ், கணவரை பிரிந்த இளம்பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுகளாக நெருக்கமாக இருந்து வந்தது தெரிந்தது.

மேலும் இளம்பெண்ணின் மகளான கல்லூரி மாணவிக்கு, சிறுமியாக இருந்த காலகட்டத்தில் இருந்தே சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜ் பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News