திருத்தணி அருகே மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் பலி
- மத்துார் கிராமத்தில் கட்டிய புதுவீட்டிற்கு மின் விளக்குகள் அலங்காரம் செய்வதற்காக கிஷோர் சென்றார்.
- வீட்டின் மாடியின் மீது அலங்கார விளக்குகள் அமைக்கும் போது, அருகே சென்ற மின் வயர் அறுந்து கிடந்தது.
திருத்தணி:
திருத்தணியை அடுத்த மத்தூர் காலனியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கிஷோர் (வயது 17). மத்தூர் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இவர் பொதுத் தேர்வு எழுதி இருந்தார். தற்போது விடுமுறை என்பதால், கிஷோர் தனது உறவினர் ஒருவருடன் திருவிழா மற்றும் புதுமனை புகுவிழா நடக்கும் வீடுகளுக்கு ரேடியோ மற்றும் மின்விளக்குகள் அலங்காரம் செய்யும் பணி செய்து வந்தார்.
இந்த நிலையில் மத்துார் கிராமத்தில் கட்டிய புதுவீட்டிற்கு மின் விளக்குகள் அலங்காரம் செய்வதற்காக கிஷோர் சென்றார்.
அப்போது வீட்டின் மாடியின் மீது அலங்கார விளக்குகள் அமைக்கும் போது, அருகே சென்ற மின் வயர் அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காத கிஷோர் வயர் மீது கால் வைத்தார்.
இதில் மின்சாரம் பாய்ந்து கிஷோர் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மின்சாரம் தாக்கியதில் மாணவன் கிஷோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.