உள்ளூர் செய்திகள்

சிவகங்கை அருகே மது குடிப்பதை கண்டித்த மனைவி அடித்துக்கொலை- போலீஸ் நிலையத்தில் தொழிலாளி சரண்

Published On 2022-06-28 05:12 GMT   |   Update On 2022-06-28 05:12 GMT
  • கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
  • வீட்டின் முன்பகுதியில் நின்று இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை:

சிவகங்கை அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் மார்க் ஆண்டனி (வயது 43). இவரது மனைவி கற்பகம் (38). இவர்களுக்கு ரவீந்திரன்(22), நவீன்(18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ரவீந்திரன் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். நவீன் பாலிடெக்னிக் படிக்கிறார்.

ஆண்டனி கேரளாவில் கரிமூட்டம் போடும் வேலை செய்து வந்தார். மனைவி மற்றும் மகன்களை பார்க்க விடுப்பு எடுத்து கொண்டு அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அதே போல் 2 நாட்களுக்கு முன்பு சிவகங்கைக்கு வந்திருக்கிறார்.

ஆண்டனிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஊருக்கு வந்திருந்த நேரத்தில் மது குடித்தப்படி இருந்துள்ளார். நேற்று இரவும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். தனது கணவரின் இந்த செயல் கற்பகத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று காலை மகன்கள் இருவரும் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டனர். அந்த நேரத்தில் மது குடித்து திரிவது குறித்து தனது கணவரிடம் கற்பகம் கேட்டார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

வீட்டின் முன்பகுதியில் நின்று இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த மார்க் ஆண்டனி, கீழே கிடந்த உடற்பயிற்சி செய்யும் தம்புல்ஸை எடுத்து கற்பகத்தின் தலையில் அடித்தார். இதில் படுகாயமடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஆத்திரத்தில் அடித்ததில் மனைவி இறந்து கிடந்ததை கண்டு மார்க் ஆண்டனி வேதனை அடைந்தார். அவர் தனது மனைவியை அடித்து கொலை செய்து விட்டதாக கூறி, சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து மார்க் ஆண்டனியின் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் வந்தனர்.

அவர்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மது குடிப்பதை கண்டித்த மனைவியை கணவர் அடித்து கொன்ற சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News