உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளி

Published On 2022-06-16 11:39 GMT   |   Update On 2022-06-16 11:39 GMT
  • கடந்த சில மாதங்களாக புஷ்பாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராஜேந்திரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
  • மில்லில் வேலையை முடித்துவிட்டு புஷ்பம் தனது தாய் சின்னபிள்ளையுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கு சென்ற ராஜேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புஷ்பத்தை சரமாரியாக குத்தினார்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 32). இவரது மனைவி புஷ்பம் (28). இவர்களுக்கு திருமணமாகி ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ராஜேந்திரன் பொள்ளாச்சி அருகே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். புஷ்பம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக புஷ்பாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராஜேந்திரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று பொள்ளாச்சியில் இருந்து வந்த ராஜேந்திரன் தனது மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அப்போது மில்லில் வேலையை முடித்துவிட்டு புஷ்பம் தனது தாய் சின்னபிள்ளையுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கு சென்ற ராஜேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புஷ்பத்தை சரமாரியாக குத்தினார்.

அப்போது தடுக்க முயன்ற சின்னபிள்ளைக்கும் கை மற்றும் கால்களில் கத்திக்குத்து விழுந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஓடி வந்தனர். உடனே ராஜேந்திரன் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

அவர்கள் புஷ்பா மற்றும் அவரது தாயாரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு புஷ்பாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

படுகாயம் அடைந்த சின்னபிள்ளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

Tags:    

Similar News