உள்ளூர் செய்திகள்

குடும்ப வறுமையால் விபரீத முடிவு- சுகாதாரத்துறை அதிகாரியின் மனைவி, மகன், மகள் தற்கொலை

Published On 2023-08-17 07:22 GMT   |   Update On 2023-08-17 07:39 GMT
  • அழுகிய நிலையில் வாசுகி, உமாதேவி, கோதண்டபாணி ஆகியோர் பிணமாக கிடந்தனர்.
  • 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை:

மதுரை அண்ணாநகர் அருகே உள்ள கோமதிபுரம் மருதுபாண்டியர் நகர், ராஜராஜன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மதுரையில் சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு உமாதேவி (45) என்ற மகளும், கோதண்டபாணி (42) என்ற மகனும் இருந்தனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாண்டியன் குடும்பத்தை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோதண்டபாணியும், உமாதேவியும் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தனர். அவர்களுடன் தாய் வாசுகியும் வசித்து வந்தார்.

கடந்த 3 நாட்களாக அவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் கவனிக்கவில்லை. இதற்கிடையே இன்று காலை வாசுகி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் வாசுகி, உமாதேவி, கோதண்டபாணி ஆகியோர் பிணமாக கிடந்தனர். 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளார்களா? என போலீசார் சோதனை செய்தனர்.

இறந்த 3 பேரும் வறுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் ஒரே குடும்பத்தில் தாய், மகன், மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News