உள்ளூர் செய்திகள்

அறச்சலூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் பணம்- நகை கொள்ளை

Published On 2023-09-24 05:20 GMT   |   Update On 2023-09-24 05:20 GMT
  • குமாரபாளையத்தில் ஆறப்பகவுண்டருக்கு சொந்தமாக 2½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
  • தினமும் பகல் நேரங்களில் ஆறப்பகவுண்டரும் அவரது மனைவி சிவகாமியும் தங்களது விவசாய நிலத்துக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

அறச்சலூர்:

அறச்சலூரை அடுத்த வடபழனி குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஆறப்பகவுண்டர்(75) விவசாயி. இவரது மனைவி சிவகாமி (65). இவர்களது ஒரே மகன் ராஜசேகர். சாப்ட்வேர் பொறியாளரான ராஜசேகருக்கு திருமணம் ஆகி விட்டது. தற்போது சென்னையில் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

குமாரபாளையத்தில் ஆறப்பகவுண்டருக்கு சொந்தமாக 2½ ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தினமும் பகல் நேரங்களில் ஆறப்பகவுண்டரும் அவரது மனைவி சிவகாமியும் தங்களது விவசாய நிலத்துக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை 11 மணிக்கு ஆறப்பகவுண்டரும் அவரது மனைவி சிவகாமியும் தங்களது விவசாய நிலத்துக்கு சென்றுள்ளனர். அந்த நேரத்தில் ஆறப்பகவுண்டரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டு மெயின்கேட்டை திறக்காமல் உள்ளே சென்று வீட்டின் உள் கதவை உடைத்து அந்த வீட்டினுள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் பணம் மற்றும் 1½ பவுன் நகையுடன் அங்கிருந்த வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.

பின்னர் மாலை 4 மணிக்கு தனது வீட்டிற்கு திரும்பிய ஆறப்பகவுண்டர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு நகை-பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் சம்பவம் குறித்து அறச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் அங்கு சென்ற போலீசார் வழக்கு பதிந்து தடவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் வடபழனி குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News