உள்ளூர் செய்திகள்

ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீ வைப்பு- பா.ஜ.க, இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேர் கைது

Published On 2023-06-23 05:26 GMT   |   Update On 2023-06-23 05:27 GMT
  • உஸ்மான், அவரது நண்பர்கள் பி.டி.ரமேஷ், சபரிகிரிவாசன், அயோத்தி ரவி ஆகியோரை கைது செய்தனர்.
  • கைதான 4 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை:

கோவை ராமநாதபுரம் சண்முகா நகரை சேர்ந்தவர் அனிஹரோன் (வயது 65).

இவர் அந்த பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வருகிறார்.

கீழ் தளத்தை உக்கடத்தை சேர்ந்த சிக்கந்தர் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதில் சிக்கந்தர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை, சிக்கந்தர் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதனை பார்த்த கட்டிடத்தின் உரிமையாளர் அனிஹரோன் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றார். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் அனிஹரோன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீ வைத்தது உக்கடத்தை சேர்ந்த உஸ்மான் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிக்கந்தர் வேலை விஷயமாக உஸ்மானிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த கடனை உஸ்மான் திருப்பி கேட்டபோது, சிக்கந்தர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதனால் அவரை பழிவாங்க உஸ்மான் நினைத்துள்ளார்.

இதுகுறித்து தனது நண்பர்களான மணியக்காரம் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்ற பி.டி.ரமேஷ், வீரகேளத்தை சேர்ந்த சபரிகிரிவாசன்(35), ராமநாதபுரத்தை சேர்ந்த அயோத்தி ரவி ஆகியோரிடம் தெரிவித்தார்.

பின்னர் 4 பேரும், சுங்கம் பகுதியில் சிக்கந்தர் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அங்கு நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது.

சிக்கந்தர் இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தீ வைத்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த உஸ்மான், அவரது நண்பர்கள் பி.டி.ரமேஷ், சபரிகிரிவாசன், அயோத்தி ரவி ஆகியோரை கைது செய்தனர்.

கைதானவர்களில் சபரிகிரிவாசன், அயோத்தி ரவி ஆகியோர் இந்து முன்னணியில் உறுப்பினராக இருப்பதும், பி.டி.ரமேஷ் பா.ஜ.க.வில் உறுப்பினராக இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News