உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

சேலம் புறநகர் பகுதிகளில் பலத்த மழை: தம்மம்பட்டியில் அதிக பட்சமாக 43 மி.மீ. மழை கொட்டியது

Published On 2023-09-04 03:57 GMT   |   Update On 2023-09-04 03:57 GMT
  • ஏற்காட்டில் நேற்று மாலை சாரல் மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.
  • திங்கட்கிழமையான இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாததால் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி கிடக்கிறது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக சேலம் புறநகர் பகுதிகளான தம்மம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் தலைவாசல் உள்பட பல பகுதகளில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது.

இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலத்திலும் நேற்று இரவு 7 மணியளவில் சூறைக்காற்றுடன் லேசான மழை தொடங்கியது. இதனால் கனமழை பெய்யும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் சேலம் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

ஏற்காட்டில் நேற்று மாலை சாரல் மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. திங்கட்கிழமையான இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாததால் முக்கிய பகுதிகள் வெறிச்சோடி கிடக்கிறது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 43 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சங்ககிரி 42, எடப்பாடி 35, மேட்டூர் 34.40, தலைவாசல் 19, ஆத்தூர் 11.60, காடையாம்பட்டி 11, ஓமலூர் 5, சேலம் 2.4, ஏற்காடு 2.2, பெத்தநயாக்கன்பாளையம் 2, கரியகோவில் 1, ஆனைமடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 209.8 மி.மீ. மழை பெய்துள்ளது.

Tags:    

Similar News