உள்ளூர் செய்திகள்

கட்சியை விட்டு வெளியேறு... எடப்பாடி பழனிசாமியை கண்டித்து பரபரப்பு போஸ்டர்கள்

Published On 2023-03-10 04:54 GMT   |   Update On 2023-03-10 04:54 GMT
  • திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

நிலக்கோட்டை:

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விஸ்வரூபம் எடுத்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்ததால் அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரது தலைமையின் கீழ் ஏராளமான நிர்வாகிகள் சேர்ந்து வருகின்றனர். தற்போது அ.தி.மு.க.-பா.ஜனதா இடையே வார்த்தை யுத்தம் எடுத்துள்ள நிலையில் சமரச முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்! அ.தி.மு.க. தோல்வியடைய காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு. சமத்துவ பேரியக்கத்தை சமுதாய கட்சியாக மாற்றிய எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேறு என்ற வகையில் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது. இவண் நிலக்கோட்டை அ.தி.மு.க. தெற்கு ஒன்றியம் என்று எழுதப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தற்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.வான தேன்மொழி சேகர் உள்ளார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் நடந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலின்போது இவர் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் 2021-ம் ஆண்டு தேர்தலிலும் அவரே மீண்டும் களம் இறக்கப்பட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் நிலக்கோட்டை பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News